என்ன சுகம் அந்தச் சுகம்

நாட்டமெங்கே எங்கள் நயினை எங்கே? கொண்டநற்
   தேட்டமெங்கே? வந்த கனடா எங்கே? ஊட்டமுற
வாழ்ந்திருந்த வாழ்வதுவும் வற்றா அருட்பெருக்கும்
   சூழ்ந்திருந்த எல்லோ சுகம்

அம்மாளின் கோவிலடி அப்பாற் பிடாரியுடன்
   எம்மான் விநாயகர் வீரருடன் - நம்முருகன்
காளி மலையினார் காட்டுள கந்தனுடன்
   நாழியும் சேர்ந்திருந்தோம் நாம்

பொங்கல் வருடம் பொதுவான பண்டிகைகள்
   எங்குமே கொண்டாடி இன்புற்று - மங்களமாய்
மேகலை நல்லரங்கில் மேன்மைக் கலை விழாவும்
   ஏகமாய்க் காண்பதினி எப்போ!

கூழுடன் கள்ளும் குதுகலிக்கக் குண்டானில்
   சூள்பிடித்த மீன்நண்டும் சூட்டுடனே - வாழ்வாங்கு
வாழ்ந்து அனுபவித்த வற்றாத அந்நாட்கள்
   சூழ்ந்து தருமா சுவை?

பள்ளிக்குப் போகாமல் பற்றைகளில் முற்றுகையாம்
   கள்ளமதைக் கண்டவுடன் ஆசிரியர் - மௌ;ளவாய்
வந்து பிரம்பாலே வாட்டிய வாட்டமதை
   எந்தநாள் காண்போம் இனி?

பந்தத்தில் பாசத்தில் பற்றி உறவுமுறைச்
   சொந்தத்தை நாம்பகிர்ந்து சொல்லிநிதம் - சந்தோசம்
பொங்கிடவே பூரித்துப் போய்நின்ற அந்தமிலா
   இங்கிதநாள் எப்போ வரும்?

சின்ன வயதுமுதல் சீரோடு சேர்ந்தொன்றி
   மண்ணில் விளையாடி மாண்புறவே - எண்ணமெல்லாம்
வண்ண மணித்தீவின் வாஞ்சை வரைந்தோமே
   என்ன சுகம் அந்தச் சுகம்

ஆக்கம் : Mr. Sunmuganathapillai BSc, SLEAS