1. பூப்பந்தாடல்

பல்லவி
பந்தெறிந்தாடு வோமே - அழகான பூம்
பந்தெறிந்தாடு வோமே (பந்)

அநுபல்லவி
மங்கையர் நாங்கள் கூடி
மகிழ்ந்து மகிழ்ந்து பாடி
அங்கும் இங்கும் பாய்ந்தோடி
அமராதி பனைப் பாடி (பந்)

சரணம்
ஆடும் அர மகளிர்
கூடிப் பூம்பந்து கொண்டு
(வேகம்) பாடி மகிழ்ந் ததனை
ஓடி அடித் தெறிந்து (பந்)

எடுத்து எறிந்து
பிடித்து மகிழ்ந்து
(வேகம்) வளைந்து நிமிர்ந்து
ஒடித்து அசைத்து (பந்)

2. அரம்பையின் அழகைப் புகழ்தல்

அழகாலே உலகத்தை
வசமாக்கும் ரம்பை
ஆடற் கலைக்கே புகழ்
கூட்டிடும் மங்கை
கலையாத திடசித்த
முனிவர்களும் உள்ளம்
கலங்கித் தவித்திட
வைத்திடும் நங்கை (அழகாலே)

நிலைநின்று நீரிலே தவம் செய்தும் தாமரை
நின்முகத் தாமரை அன்ன வனப்பின்றித்
தலை குனிந்த தேயங்கு நீரிலே நின்முகத்
தாமரை விம்பத்தைத் தாபத்தோ டேநோக்கும் (அழகாலே)

முகத்தா மரையிலே தேனுண்ண எண்ணியே
மொய்க்க வருகுது வண்டுகள் பார்த்திடு
நிலையாகச் சிறகடித் தங்கு இருவண்டு
நிற்பது கண்டவை சற்றுத் தயங்குது (அழகாலே)
அல்லது:

தோழி 1 பூக்கள் நிறைந்த இந்தப்
பொய்கை மலர்களை நாம்
பார்க்கும் பொழுது உள்ளம்
பரவசங் கொள்ளுதேயோ (பூக்கள்)

தோழி 2 வேடிக்கை பாராய் நீரில்
வெட்கித் கமலம் எல்லாம்
வாடித் தலை குனிய
வைக்கும் ஒரு மலரை (வேடிக்கை)

தோழி 3 ஆகா.......... அதுவோ ..........
தேவர் முனிவர் சிந்தை
திகைத்துக் கலங்கி நிற்க
ஆவலோ டாடுமெங்கள்
அரம்பை முக விம்பமே (தேவர்)

தோழி 4 தாமரை என்று முகம்
தனை நாடி வந்தவண்டு
ஏமலித்துக் கலங்கும்
இமைக்கும் கண்வண்டு கண்டு (தாமரை)

3. நாரதர் வருகை கண்டு தோழியர் வணங்குதல்

பணிந்தோம் நாரத மாமுனியே - நின்பாதம்
பணிந்தோம் நாரத மாமுனியே (பணிந்)

வீணை இசையினாலே மூவரையும் ஆராதிக்கும் - கலை
வாணராம் மாமுனியே வணங்கினோம் நின்பொற்பாதம் (பணிந்)

தேடி நீர் இங்குவரக் கோடி தவம் புரிந்தோம்
நாடியே வந்ததென்ன நாங்கள் அறியலாமோ (பணிந்)

4. தோழிகள் அரம்பையைக் கண்டித்தல்

என்ன காரியம் செய்தனை - ரம்பாநீயும்
என்ன காரியம் செய்தனை (என்ன)

பாரெல்லாம் போற்றும் தெய்வ
நாரத முனிவர்
சோலையில் வந்தார் நீ ஏன்
துதிக்கா தசட்டை செய்தாய் (என்ன)

அழகினால் கர்வம் கொண்டாய்
அவ் விம்பம் நீரில் கண்டாய்
தவ முனியை இகழ்ந்தாய்
தவறு நீயும் புரிந்தாய் (என்னை)

5. அரம்பை பதிலுரை

மனத்தை எங்கோ செலுத்தி
மயங்கியே நின்று விட்டேன்
எனக்கு நீர் கூறும் வரை
ஏதும் அறிந்திலனே (மனத்தை)

தெரியாமல் செய்த பிழை
தேவ ரிஷி மன்னிப்பார்
புரியாமல் ஏது ஏதோ
புலம்பிட வேண்டாம் வாரீர் (மனத்தை)

6. ஊர்வசியும் தோழிகளும் இந்திரலோகத்தைப் புகழ்ந்து ஆடிப்பாடல்

இந்திர லோகம் இதுவே - இதற்கு இணை
எந்த உலகத்திலும் இல்லை இல்லை இல்லையே (இந்திர)

தேவர்கள் போற்றி ஏத்தும்
தேவேந் திரன் எம்மிறை
காவில் உயர்ந்த தெய்வக்
கற்பகச் சோலை கொண்ட (இந்திர)

அழகுத் திரு நகராம்
அமரா பதி யிதனில்
நிலவிடும் செல்வ மெல்லாம்
நினைக்கவெம் உள்ளம் விம்மும் (இந்திர)

7. நாரதர் வருதல் கண்டு அவரைப் போற்றல்

முனிவர் பெருமானே வருவீர் - எம்
முன்னை வினைப் பயனால்
உம்மை அடி பணிந்தோம் (முனிவர்)

ஆக்கும் தவ சிரெட்டர்
அடியிணை பட்டதனால்
பாக்கியம் செய்ததிந்தப்
பதியாகும் தேவலோகம் (முனிவர்)

எண்ணி எழுந்தருள
இருந்த செயலெதுவோ
புண்ணிய செப்பிடுவீர்
பொன்னடி போற்றி நின்றோம் (முனிவர்)

8. நாரதரை இந்திரன் வரவேற்றல்

இந்திரன்: மகரிஷியே வருக - நாரத
மகரிஷியே வருக

அமரா பதியில் திரு வடிகள் படுதலாலே
புனிதராகினோம் நாங்கள்
புங்கவரே வருவீர் (மகரிஷியே)

ஆசனத்தில் அமர்ந்து அடிகள் நீர் இங்குவந்த
காரணத்தை உரைப்பீர்
கணத்திலே பூர்த்தி செய்வேன் (மகரிஷியே)

9. நாரதர்: (விருத்தம்)

அப்சரஸ் ஆடல் வல்லார்
அநேகர் உன் சபையில் உள்ளார்
மிக்கவர் அவருள் யாவர்
விளம்பிடாய் தேவர்கோனே (அப்சரஸ்)

10. இந்திரன்:

அழகிற் சிறந்த ரம்பை
ஆடலரசி உள்ளாள்
பழகிய பாடல் நுட்பம்
பரதத்திற் காட்டவல்லாள் (அழகில்)

11. நாரதர்:

ஒருத்தி தான் இங்குள்ளாளோ
ஊர்வசி மேனகை தி
லோத்தமை என்போர் ஆடற்
சிறப்பையும் கேட்டுள்ளேனே (ஒருத்தி)

12. இந்திரன்:

தேவரீர் கூறியது
தேவ ருலகறியும்
ஊர்வசி ஆடல் நுட்பம்
உணர்ந்த கலை அரசி (தேவ)

13. நாரதர்:

இருவரில் யாவர் வல்லார்
இந்திரா கூறுவாயோ
அலதொரு போட்டி வைத்து
அறிந்திட வேண்டுமோ தான் (இரு)

14. இந்திரன்: (விருத்தம்)

இருவரில் ஆடல் வல்லார்
யார் எனக் கூறல் கஷ்டம்
அறிவ நின் உளம்போல் போட்டி
அமைக்கின்றேன் அழைக்கின்றேனே (தேவ)

15. ஆடற்கோலமொடு வந்து இருவரும்

வணங்குகின்றோமே நாமே - எம்
வணக்கத்தை ஏற்றருள்வீர்
இணங்கியே வந்தோம் போட்டிக்
கென்ன நிபந்தனையோ

16. நாரதர்:

பூக்கள் கையில் தருவேன் - அதில்
புகுந்து தேன் உண்ணும் வண்டு - உம்
ஆட்டத்திற் கலைந் தெழாமல் - நீர்
ஆடுதல் வேண்டும் கண்டீர்

17. விருத்தம்

வண்டது கலைந்த பூவை
வைத்திருந் தோரே தோற்பீர்
நன்று நும் ஆடல் காண்போம்
நடனம் நீர் ஆடுவீரே

18. நடனம் பாடல்

நாட்டியக் கலைக்கு நிகரேது - அறு
பத்து நான்கு கலையில் - அதி
உத்தமக் கலையாய் மிளிர் (நாட்டிய)

அநுபல்லவி
பாட்டும் பொருளும் ஒன்றாய்க்
கூட்டிச் சுருதி லயம்
நாட்டிய பாவமதில்
காட்டி உளம் நிறைக்கும் (நாட்டிய)

சரணம்
ஆட லரசன் நட
ராசனும் ஆடியது
வேடம் புனைந்து பல
தேவர் கொண் டாடியது (நாட்டிய)

கணபதி முருகன்
திருமால் காளி
அனைவரும் மகிழ்ந்து
ஆடிய தெய்வீக (நாட்டிய)

19. இந்திரன்:

வண்டு கலைந்திடாமல்
நன்கு நடனமாடி
வென்று வரும் ஊர்வசி
கொண்டிடுவாய் பரிசில் (வண்டு)

20. அரம்பை நாரதரிடம்

மன்னித் தருள்வீர் தேவா - என்னை
மன்னித் தருள்வீர் தேவா - என்னை (மன்னித்)

அழகு மமதை தந்த
ஆணவத்தாற் செருக்கி
விளையும் கேட்டை உணர்ந்தேன்
வேண்டிப் பதம் பணிந்தேன் (மன்னித்)

எமக்கு அறிவுறுத்த
எடுத்தீர் நீர் இச்சிரமம்
உமக்கு நான் காட்டும் நன்றி
உண்டோ மகானுபாவா (மன்னித்)

21. நாரதர்:

பணிவு தரும் நல்லாக்கம்
பலவும் என உணர்ந்தாய்
அணியாய் அதனைக் கொள்வாய்
அரம்பையே வாழ்க நீடு