பொங்கியெழு மங்கையெழில்
பூத்த மலரிதழோ!
மங்கையிவள் அங்கமெலாம்
தங்கநிகர் சிலையோ!
பங்கமிலாப் பைந்தமிழில்
பாடுமெழில் உனதோ!
சங்கம்வளர் கங்கைமகள்
தந்தகவி நானோ!
சிந்துகமழ் சந்தணமும்
தந்திடுவேன் நாளும்
வந்துஉயர் தந்துயெனை
வாழ்த்திவிடு நீயும்!
எந்தனுயிர் உள்ளவரை
உன்னைத்தினந் துதிப்பேன்
உந்தன்மலர்ப் பாதமதில்
உயர்கவிதை படைப்பேன்!
கங்கைமகள் பெற்றெடுத்த
மங்கையிவள் என்றே
காலமெலாம் கவியுரைக்கக்
கவிஞர்பலர் வருவர்!
திங்கள்முகம் காட்டியெனைத்
தேற்றிவிடு தாயே!
தேன்கவிகள் நான்படைக்க
வாழ்த்திவிடு நீயே!
கலைவாணி அருள்பெற்ற
கவிஞன் இவனென்றே
கவியுலகம் நாள்தோறும்
உனைப்புகழ வேண்டும்!
சிலையாக வந்துதிப்பாய்
நாவினிலே நீயும்
நிலையாக நான்பாட
நீயருள்வாய் நாளும்!!
சிறீ சிறீஸ்கந்தராஜா ( 21/02/2015 )
Author
Srikandarajah (கங்கைமகன்)